கிளிநொச்சியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை ஆசிரியர் மிக மோசமாக தாக்கியதில் மாணவன் கையில் காயம் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்து்ளளனர்.
தனது துவிச் சக்கர வண்டியை தொலைத்த நிலையில், கடந்த வாரம் மூன்று நாட்களாக மாணவன் பாடசாலைக்குச் செல்லவில்லை என கூறப்படுகின்றது. அதன் பின்னர் , இவ்வாரம் பாடசாலைக்குச் சென்றுள்ளார்.
எனினும், கடந்த வாரம் வழங்கப்பட்ட வீட்டுப் பாடங்களை மாணவன் செய்திருக்கவில்லை. இதன் காரணமாக பெரியளவிலான தடி ஒன்றினால், ஆசிரியர் அந்த மாணவனை தாக்கியுள்ளார். இதனால் கையில் காயமும் வீக்கமும் ஏற்பட்டுள்ளதுடன் உடம்பில் உட்காயங்கள் காரணமாக மகன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் உப அதிபரின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அத்தோடு தனது மகன் அந்தப் பாடசாலைக்கு செல்வதனை விரும்பவில்லை என்பதனால் வேறு பாடசாலை ஒன்றில் மகனை இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
அதேசமயம் மேற்படி விவகாரம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் உறுதிப்படுத்தியதுடன், சம்பவம் குறித்து கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Follow on social media