யானைகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு சட்ட நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வனப்பகுதியில் வீதி ஓரங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

வனப்பகுதி ஊடான வீதிகளில் வாகனங்களில் பயணிப்பவர்களால் வீதி ஓரங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளுக்கு உணவு அளிப்பதால், விலங்குகள் வீதிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இதனால் அந்த வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையூறாக யானைகள் உணவு பெறும் சம்பவங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி பதிவாகின.

எனவே, காடுகளை அண்டிய வீதிகளில் பயணிக்கும் போது வன விலங்குகளுக்கு உணவளிப்பதை தவிர்க்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மக்களிடம் கோரியுள்ளது.

இதனிடையே, அனுமதியற்ற மின்சார கம்பிகளில் மோதி கடந்த 7 மாதங்களில் 36 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

வன விலங்குகளிடம் இருந்து விவசாய நிலங்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக சிலர் பாதுகாப்பற்ற மின் கம்பிகளை அமைத்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் யானைகள் கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகளின்படி மின்வேலிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த முறையின்றி சிலரால் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத மின் கம்பிகளால் யானைகள் உயிரிழப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே தனியார் மின்வேலி அமைக்கும் பட்சத்தில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே அதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு அமைக்காத மின்வேலிகளை அமைப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தேக்க மகா ஏத்தா அல்லது தேக்க ராஜா என்ற யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 4 அடி நீளம் கொண்ட ஜோடி தந்தங்களுடன் நேற்று (26) திக்வெவ காட்டுப் பகுதியில் அந்த யானை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting