முல்லைத்தீவில் கனமழை | வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் கதவுகளிலிருந்து நீர் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது.

எனவே தற்போது பெய்கின்ற சிறிய மழைக்கு கூட மிக பெரிய அழிவுகளை எதிர்நோக்குகின்ற நிலைமைக்கு முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் சற்று முன்னர் திடீரென வந்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இதேபோன்று குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுவதால் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதோடு வான் கதவுகள் வழியே பாய்கின்ற நீர் மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று காலை 9 மணி வரையான தகவல் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்த குளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 261 குடும்பங்களை சேர்ந்த 870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 127 குடும்பங்களை சேர்ந்த 423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை , தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 44 குடும்பங்களை சேர்ந்த 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம், உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான், மல்லாவி, யோகபுரம் கிழக்கு, புகழேந்தி நகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 86 குடும்பங்களை சேர்ந்த 267 பேர் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்கள் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு மற்றும் தேவிபுரம் கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 177 குடும்பங்களை சேர்ந்த 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேரும், புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும், பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவில் 19 குடும்பங்களை சேர்ந்த 55 பேருமாக 28 குடும்பங்களை சேர்ந்த 93 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.