காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இடையே கைகலப்பு – 7 பேர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்துக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றிருந்ததுடன், அதிலிருந்து ஒரு பகுதியினர் வெளியேறியிருந்தனர்.

இந்நிலையில் வெளியேறிய அணியினரை வைத்து வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்டத்துக்கான புதிய நிர்வாகத் தெரிவு ஒன்றை மேற்கொள்வதற்காக கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தனர்.

இந்நிலையில் கூட்டத்துக்கு வருகை தந்த வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்களுக்கும் வவுனியாவில் அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்துக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

பாதிக்கப்பட்ட தாய்மார் தமக்குள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி தம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முறையிட்டனர்.

அதனை தொடர்ந்து, கூட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த வவுனியா நகரசபை செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கூட்டத்தை நடத்த விடாமல் இரு பகுதி தாய்மாரையும் அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர்.

வெளியேறிய இரு பகுதியினரும் வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு சென்று தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, இரு பகுதியினரும் இணக்கப்பாட்டுக்கு வராமல், ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி, செயலாளர் ஆனந்தன் நடராஜா லீலாதேவி, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சபிதா ராஸ்திரி, வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான சண்முகராசா சறோஜினிதேவி, சிவாநந்தன் ஜெனிற்றா, செல்லத்துரை கமலா, பேரின்பராசா பாலேஸ்வரி ஆகியோரே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply