மட்டு ஏறாவூரில் பிள்ளைகளை துன்புறுத்திய தாய் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 11 வயது சிறுவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கம்பால் அடித்து சித்திரவதை செய்ததுடன் இரண்டரை வயது ஆண் குழந்தையை அடித்து துன்புறுத்திய 28 வயதுடைய தாய் ஒருவரை நேற்று (28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

தமிழரான குறித்த தாயார் திருமணம் முடித்த பின்னர் கணவரைவிட்டுவிட்டு அவருக்கு பிறந்த குழந்தையுடன் முஸ்லீம் மதத்திற்கு மதம்மாறி முஸ்லீம் நபர் ஒருவரை திருமணம் முடித்துள்ளார்.

அதன்பின்னர் அவரை விட்டுவிட்டு புத்தளம் பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவரை திருமணம் முடித்து அவருக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில், அவரையும் விட்டுவிட்டு இரு பிள்ளைகளுடன் மீண்டும் ஏறாவூர் சதாம் உசைன் கிராமத்தில் வந்து தங்கி வாழ்ந்து கொண்டுவருகின்றார்.

இந்த நிலையில், கடந்த ஏப்பிரல் மாதம் தனது 11 வயதுடைய மூத்த பிள்ளை புகைத்தலில் ஈடுபட்டார் என அந்த சிறுவனை பிடித்து மரம் ஒன்றில் தலைகீழக கட்டி தொங்க விட்டு கம்பால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.

அதேவேளை இரண்டாவது, இரண்டரை வயது மகனையும் அடித்து துன்புறுத்தி வருவதாக அந்த பிள்ளையின் தகப்பனான புத்தளத்தைச் சேர்ந்தவருக்கு தெரியவந்ததையடுத்து அவர் உடனடியாக ஏறாவூருக்கு சென்று தாயாரிடம் தனது மகனை தருமாறு கேட்ட நிலையில், சிறுவனை தரமுடியாது என அவர் மறுத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த தந்தை, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவதினமான நேற்று இரவு பொலிசார் குறித்த தாயாரின் கையடக்க தொலைபேசியை பரிசோதித்த போது, இரு சிறுவர்களை துன்புறுத்தும் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரை கைது செய்தனர்.

பின்னர் இரு பிள்ளைகளையும் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply