நாட்டின் கரையோரத்தில் பயணிக்கும் கப்பல்களில் ஏற்படும் எண்ணெய் கசிவுகளை செய்மதி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கண்காணிப்பு சேவைகளை வழங்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
அதன்படி, ஒரு வருட காலத்திற்கு செய்மதி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எண்ணெய் கசிவு கண்காணிப்பு சேவை தொடர்பாக பிரான்சின் Collected Localization Satellites (CLS) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அதிகாரத்தை கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு வழங்குமாறு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்மொழிந்துள்ளார்.
திட்டத்தின் மொத்த மதிப்பு 601,810.00 யூரோக்கள். இது முக்கியமாக Collected Localization Satellites (CLS) இற்கு வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முழு நிதிச் செலவையும் பிரான்ஸ் அரசே ஏற்கும். எனவே, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு எந்தவித செலவையும் ஏற்க வேண்டியதில்லை.
இந்த நாட்டின் கடற்கரையோரத்தில் கப்பல்கள் பயணிக்கும் பாதைகளை அடையாளம் கண்டு, மாசுபடுத்துபவர்களுக்கு எதிராக உடனடியாக எதிர்வினை ஆற்றும் நடவடிக்கைகள் மற்றும் சட்ட அமுலாக்க முறைகளை உருவாக்குதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கத்திற்குள் அடங்கும்.
Follow on social media