யாழில். துப்பாக்கிச் சூடு மூவர் காயம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் அவர்களைத் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற சந்தேகித்து இளைஞர்கள் இருவரின் வீடு மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த்தாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் இளைஞர்கள் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து ஆபாசமான சமூக ஊடகங்களில் வௌியிடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இளைஞர்கள் இருவர் மீது சந்தேகம் கொண்டு அவர்களின் வீடுகளுக்குள் நேற்றிரவு 11.30 மணியளவில் புகுந்த 50இற்கும் மேற்பட்டோர் அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அத்துடன், வீட்டுக்குள் இருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் வீட்டு வளாகத்திலிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதை தடுத்த நிலையில் அங்கு வருகை தந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting