பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து திஹாகொட பொலிஸ் நிலைய வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த போது, அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட சென்ற போது, திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த மாணவன் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தையடுத்து, திஹாகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கிராம மக்கள் திரண்டதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Follow on social media