சம்பூர் கிராம நிலப்பிரச்சினை தொடர்பான ஆவணப்பட வெளியீடும் உரையாடலும் இன்று புதன்கிழமை (28) மாலை சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் யுத்தம் நிறைவு பெற்ற நிலையிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் மக்களின் நில உரிமை மறுக்கப்பட்டு வருவது நாம் அறிவோம்.
அந்த வகையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில்; தமிழ் முஸ்லிம் மக்களின் பல ஆயிரம் ஏக்கர் பூர்வீக குடியிருப்பு மற்றும் ஜீவனோபாய நிலங்கள் அரசின் பல தரப்பட்ட பொறிமுறைகளின் மூலம் சட்ட ரீதியாகவும் எந்த விதமான சட்ட ஏற்பாடுகளும் இன்றியும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றுவரை இம்மக்கள் நில மீட்பிற்கான பல தரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் கடந்த கிழமை வரைக்கும் எந்தக் காணிகளும் விடுவிக்கப்படாமல் மீண்டும் மீண்டும் கையகப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையையே நாம் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் அவதானித்து வருகின்றோம்.
குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களது நில மீட்பிற்கான பல ஜனநாயக போராட்டங்கள், மாநாடுகள், மற்றும் தேசிய சர்வதேச சமூகங்களுடன் பல சந்திப்புக்களை மேற்கொண்ட போதும் இன்னும் மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கப் பெறவில்லை.
இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் பல ஆயிரம் மக்கள் நிலத்தை இழந்தவர்களாக இருக்கின்ற நிலையில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் கிராம மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இன்னுமொரு வடிவமாக நிலத்தை இழந்த மக்களின் வலியை சுமந்ததான இரு ஆவணப்படமும் இன்று(28.05.2025) 02ம் தடவையாக சம்பூர் கிராமத்தில் அகம் மனிதாபிமான வள நிலையம் மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பு என்பன இணைந்து வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வானது அகம் மனிதாபிமான வள நிலையம் மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்புக்களின் பணிப்பாளர் திரு.கண்டுமணி லவகுசராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் வெளியீட்டு nikalvil,AHRC இன் பிரதி இணைப்பாளர் திரு. அழகுராசா மதன் சம்பூர் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது தலைமையுரையை தொடர்ந்து இரண்டு ஆவணப்படங்களும் திரையிடப்பட்டது.
தொடர்ந்து இந்த நில மீட்பிற்கு கடந்த காலங்களில் செயற்ப் பட்ட செயற்பாட்டார்களின் கருத்துக்களும் பகிரப்பட்டது.