முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியல் உத்தரவு தொடந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் T.சரவணராஜா முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் காணொளி தொழில்நுட்பத்தினூடாக நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் 6 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சட்ட மருத்துவ பரிசோதனையில், இரண்டு மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
13 மற்றும் 17 வயதான மாணவிகளே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதவானிடம் அறிவித்துள்ளனர். அதற்கமைய, சந்தேகநபரான ஆசிரியருக்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவை சேர்ந்த 28 வயதான ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை ஆசிரியருக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மாணவர் ஒருவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளிடம் மேலும் வாக்குமூலம் பெறப்படவுள்ளதால், சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முல்லைத்தீவில் மேலதிக வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் ஒருவர், திட்டமிட்ட வகையில் பாடசாலை மாணவிகளை அச்சுறுத்தி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இதற்காக மாணவர்கள், மாணவிகள் மத்தியில் காதல் தொடர்புகளை ஏற்படுத்தும் வகையிலான சூழலை ஆசிரியர் உருவாக்கியமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை ஆறு மாணவர்கள் ஊடாக சந்தேகநபரான ஆசிரியர் பெற்றுக்கொண்டு புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மாணவிகளிடம் காண்பித்து அவர்களை சந்தேகநபர் அச்சுறுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒரு மாணவி கடந்த வாரம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய இந்த சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வெளிக்கொணரப்பட்டன.
குறித்த ஆசிரியர் மூன்று வருடங்களாக மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளமையும் தெரியவந்துள்ள நிலையில், முல்லைத்தீவு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media