பெண் பொலிஸார் குளிப்பதை, கூரையின் தகரத்தை நீக்கிவிட்டு அதிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு-07, மலலசேகர மாவத்தையில் உள்ள பொலிஸ் கலாசார பிரிவில் இணைந்து சேவையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் தங்கியிருக்கும் வீட்டின் குளியல் அறையின் கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் தகரத்தை கழற்றிவிட்டு, பெண் பொலிஸார் குளித்துக்கொண்டிருப்பதை பார்த்து ரசித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றுபவர் என்றும் கைது செய்யப்படும் போது, அவர் மதுபோதையில் இருந்துள்ளார் என்றும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
விரட்டிப்பிடித்த பொலிஸார்
அத்துடன் அவர், பிரபல அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு கடமையிலேயே ஈடுபடுத்தப்பட்டிருந்தார் என்றும் அறியமுடிகின்றது. இந்நிலையில் தாங்கள் குளித்துக்கொண்டிருப்பதை யாரோ, கூரையில் இருந்து பார்ப்பதை அவதானித்த பெண் பொலிஸார் இதுதொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இதனையடுத்து அவரை கைது செய்வதற்கு முயன்றபோது, கூரையிலிருந்து குதித்து அவர் தப்பியோடியுள்ளார்.
எனினும், பின்தொடர்ந்து விரட்டிய பொலிஸார், டொரின்டன் மாவத்தையில் வைத்து அவரை கைது செய்து கறுவாத்தோட்ட பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். மேலும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் பொலிஸ் சார்ஜன்ட் என தெரியவந்ததாகவும் பொலிஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
Follow on social media